சென்னை மாங்காடு மற்றும் கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த மாதம் சென்னையிலுள்ள 13 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த பிப்ரவரி 8-ம் தேதி, சென்னையிலுள்ள 13 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மெயிலில், “நான் கூறுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் பள்ளியில் 2 வெடிகுண்டுகள் வைத்திருக்கிறோம். இவை வெடித்து சிதறுவதற்குள், பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்ற ரீதியில் பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் நிர்வாகத்தினர் உடனடியாக பள்ளிக் குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே வரவழைத்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றனர். அதையடுத்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் அனைத்து பள்ளிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு நிபுணர்களின் தீவிர சோதனைக்குப் பிறகு எந்தப் பள்ளிகளிலும் வெடிகுண்டு இல்லை, இது ஒரு வதந்தி என்பது நிரூபணமானது.
அதேபோல, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே இமெயிலிலிருந்து ஒரே மாதிரியான மிரட்டல் வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்த இமெயில் ஐடி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புரோடான்(Proton mail) எனும் தனியார் நிறுவன இமெயில் நெட்வொர்க்கின் ஐடி என்பதைக் கண்டறிந்த தமிழ்நாடு காவல்துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், புரோடான் நிறுவனம் சரிவர பதிலளிக்காததால், புரோடான் மெயில் நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கவேண்டும் என மத்திய மத்திய தகவல் தொடர்புதுறையிடம் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் சென்னை மற்றும் கோவையிலுள்ள இரு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஞாயிறன்று கோவை வடவள்ளி அருகே காளம்பாளையத்தில் உள்ள பத்ம சேஷாஸ்திரி தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்து காவல்துறையினரின் தீவிர சோதனையில் அது வதந்தி என்பது நிரூபனமானது. இந்த நிலையில், மீண்டும் அதே பள்ளிக்கு இமெயில் மூலம் நேற்று (திங்கள்) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக வடவள்ளி காவல்துறைக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவலளிக்க, விரைந்து வந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காத நிலையில் அதுவும் வதந்தி என்றானது.
இதேபோல, கடந்த மார்ச் 1-ம் தேதி சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் தவறான செய்தி என்பது தெரியவந்தது. மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் மீண்டும் ஒரே பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள இந்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY