மங்களூரு, : ‘ஆசிட் வீச்சுக்கு ஆளான மூன்று மாணவியருக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்’ என, கர்நாடக மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது.
தட்சிண கன்னடாவின், கடபாவில் உள்ள அரசு பி.யு.சி., கல்லுாரியில் நேற்று முன்தினம் காலை, இரண்டாம் ஆண்டு தேர்வு நடந்தது. மூன்று மாணவியர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த நபர், மாணவியர் மீது ஆசிட் வீசிவிட்டுத் தப்பியோட முயற்சித்தார்.
அவரை பொதுமக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆசீட் வீச்சுக்கு ஆளான மூவரில் ஒருவரின் முகத்தின் பெரும்பகுதி காயம் ஏற்பட்டுள்ளது.
மற்ற இருவரும் லேசான காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தின், நீலம்பூரைச் சேர்ந்த எம்.பி.ஏ., மாணவர் ஆபின், 23, என்பவரை போலீசார் கைது செய்தனர். ஒருதலை காதல் காரணமாக, இச்சம்பவம் நடந்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
இந்நிலையில், மங்களூரின், ஏ.ஜெ., மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவியரை சந்தித்து, கர்நாடக மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, நேற்று நலம் விசாரித்தார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின், நாகலட்சுமி கூறியதாவது:
சம்பவம் தொடர்பாக ஆலோசிக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. மாணவியர் மன தைரியத்துடன் உள்ளனர்.
மாணவியரின் சிகிச்சைக்காக, மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கும். சிகிச்சைக்கு பின் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்