ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் ஆசியா பசிபிக் மற்றும் அமெரிக்காப் பிராந்தியப் பணிப்பாளர் மதிவ் ஹெட்ஜஸ் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் இலங்கைப் பணிப்பாளர் சஞ்சே விக்னராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை பாராளுமன்றத்துடன் நெருக்கமாகப் பணியாற்றும் ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தினால் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட குழுக்களின் செயற்பாடுகளுக்கு வழங்கும் ஒத்துழைப்பை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன பாராட்டினார். இதன்மூலம் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு முடிந்துள்ளதாகத் தெரிவித்த சபாநாயகர் இந்த ஆதரவுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிர்காலத்திலும் ஆதரவுகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் ஆசியா பசிபிக் மற்றும் அமெரிக்காப் பிராந்தியப் பணிப்பாளர் மதிவ் ஹெட்ஜஸ் குறிப்பிடுகையில், இலங்கை பாராளுமன்றத்துக்கான ஒத்துழைப்புக்களை வழங்க முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். அத்துடன், சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவற்றின் வினைத்திறன்வாய்ந்த தன்மை தொடர்பான ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றம் தயாரித்துள்ள முறைமை தொடர்பில் அவர் விளக்கமளித்ததுடன் இது தொடர்பில் இலங்கைப் பாராளுமன்றத்துடன் பணியாற்ற எதிர்பார்ப்பதாவும் தெரிவித்தார்.
சட்டவாக்கத்தின் பின்னரான நுண்ணாய்வு பற்றிய பாராளுமன்றக் குழுவொன்றை நிறுவுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய நிலையியற் கட்டளைகளை திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அத்துடன், சட்டவாக்கத்தின் பின்னரான நுண்ணாய்வு தொடர்பில் பாராளுமன்றப் பணியாளர்களுக்கு திறன் விருத்தி மற்றும் பயிற்சி வழங்க வேண்டியதன் அவசியத்தையும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
அதற்கு மேலதிகமாக, பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் இளைஞர் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கல், திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கள் பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் பொதுமக்கள் வெளித்தொடர்பு செயற்பாடுகள் ஊடாக பொதுமக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையிலான இடைவெளியை நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.