’’ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் மாணவிகளுக்கு வழங்கி வரும் ஊக்கத்தொகை, இந்தாண்டு பல மாவட்டங்களில் வழங்கப்படவில்லை” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தெரிவித்து, தொகையை வழங்க அரசை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,
“தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
ஆதிதிராவிடர் மாணவிகளில்,
3, 4, 5 ஆகிய வகுப்புகளில் படிக்க்கும் மாணவிகளுக்கு ரூ. 500,
6-ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 1000,
7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 1500
என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ஒருமுறை இத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி 2022-23 கல்வி ஆண்டில் ரூ 43.44 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் தற்போதுவரை பல மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து இத்துறையின் இயக்குநரிடம் கேட்டதற்கு, ஆதார் எண்ணை இணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது, இரண்டு வாரத்தில் கொடுத்து முடித்து விடுவோம் என்று தெரிவிக்கப்பட்டது.
கல்வி ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் உடனடியாக இத்தொகையை வழங்கிட வேண்டும். எதிர்வரும் காலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் முறையை மேலும் எளிமைப்படுத்தி கல்வி ஆண்டு தொடங்கிய சில மாதங்களிலேயே இத்தொகையை மாணவிகளுக்கு வழங்கிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.