“பொன்முடிக்கு பதவி வழங்குவது குறித்து விரைவில் முடிவு” – பேரவை தலைவர் மு.அப்பாவு

திருநெல்வேலி: “முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால் அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட்ட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியது: “ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

வெள்ளைக்காரர்கள்தான் இந்திய கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று 2 மாதங்களுக்குமுன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார். அதேபோல் பலரும் பேசி வருகிறார்கள். பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு இந்திய கலாச்சாரம் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது உயர் சாதியினர் மட்டுமே படிக்கலாம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம், ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம், சொத்து வாங்கலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால் கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற வெள்ளைக்காரர்கள் வருகைக்கு பிறகுதான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் மத போதகர்களாக வந்தாலும், அதை தாண்டி இந்திய, தமிழக கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள். தமிழர்கள், இந்தியர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார்கள்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப் பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இப்போது அவருடைய தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, அவருக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும்.

வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் எடுக்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு சட்டப்பேரவை முதன்மைச் செயல்ருடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.