மாண்டியா : ‘மாண்டியா தொகுதியில் ம.ஜ.த.,வின் முன்னாள் பிரதமர் தேவகவுடா போட்டியிட உள்ளார்’ என, பா.ஜ., – ம.ஜ.த., தொண்டர்கள், ‘வாட்ஸாப் ஸ்டேட்டஸ்’ மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பி வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணியில், மாண்டியா, ஹாசன் உட்பட நான்கு தொகுதிகளை ம.ஜ.த., கேட்டுள்ளது. இதில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என, ம.ஜ.த.,வுக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. தொண்டர்கள், குமாரசாமியையும், அவரது மகன் நிகிலையும் மாண்டியாவில் களமிறக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் இருவரும் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
இவர்களை அடுத்து, கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவை போட்டியிட வைக்க விரும்பும் ம.ஜ.த.,வினருடன் பா.ஜ., தொண்டர்களும் சேர்ந்தது தான் விசேஷம்.
லோக்சபா தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மாண்டியாவில் போட்டியிட வேண்டும் என்று ம.ஜ.த., – பா.ஜ., தொண்டர்கள், தங்கள் வாட்ஸாப் ஸ்டேட்டஸ், சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பி வருகின்றனர்.
ஏற்கனவே தற்போதைய சுயேச்சை எம்.பி., சுமலதா, மாண்டியாவில் போட்டியிட பா.ஜ., சீட் தரும் என, கூறி வருகிறார். மறுபுறம் ம.ஜ.த.,வின் முன்னாள் எம்.பி., புட்டராஜு களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது தேவகவுடாவின் பெயர் அடிபடுவது, மாண்டியா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை தேவகவுடா போட்டியிட்டால், என்ன நடக்கும் என்ற தேர்தல் கணிப்புகளும் துவங்கி விட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement