ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பி வந்த தளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புதுறை அமைச்சகம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓடிடியில் சென்சார் இல்லாததால் அதிக வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. தவிர ஒரு சில சமூக வலைதளப் பக்கங்களும், செயலிகளும் ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பி மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால் இதனைத் தடுக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இம்மாதிரியான தளங்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர் எச்சரிக்கைகளுக்குப் பிறகும் விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல் இயங்கி வந்த 18 OTT தளங்கள், 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் 57 சமூக வலைதள கணக்குகளை முடக்கி இருக்கிறது. மேலும் 12 பேஸ்புக் பக்கங்கள், 17 இன்ஸ்டாகிராம் பக்கங்கள், 16 ட்விட்டர் பக்கங்கள், 12 யூடியூப் சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன.
சில OTT தளங்கள் 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் வகையில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை இடம்பெறச் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.