ஆய்வக உதவியாளர்களுக்கும் பாடவேளை அட்டவணை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளிகளின் ஆய்வக உதவியாளர்களுக்கும் இனி செய்முறை பாடவேளை அட்டவணை தயார் செய்து வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு வரும் கல்வியாண்டில் (2024-25) இருந்து 6 முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு ஆய்வகங்களில் செய்முறை வகுப்பு பாடவேளைக்கான அட்டவணையை தலைமை ஆசிரியரால் தயார் செய்து வழங்கப்பட வேண்டும்.

கல்வியாண்டு தொடக்கத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கால அட்டவணை தயாரித்த பின்னர் அதன் அடிப்படையில் வகுப்பு வாரியாக மாணவர்கள் எந்தெந்தஆய்வகங்களை பாடவேளைகளில் பயன்படுத்தலாம் என்று முன்கூட்டியே திட்டமிடுதல் வேண்டும்.

இதுதவிர ஆய்வகங்களுக்கான பயன்பாட்டு அட்டவணையை தயார் செய்து பள்ளிகள் திறக்கும் நாளில் ஆய்வக உதவியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும். இதுசார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது அரசுப் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், மொழி, கணிதம், தொழிற்கல்வி ஆய்வ கங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.