ஒட்டகத்தின் கடைக்கண் பார்வை கிடைக்க ஏழு நாட்கள் ஆனது : பிரித்விராஜ்

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் தனது திரையுலக பயணத்தில் இதுவரை இல்லாத உயிரைக் கொடுத்து நடித்துள்ள படம் என்று சொல்லும் விதமாக ஆடுஜீவிதம் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இயக்குனர் பிளஸ்ஸி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து அரபு நாட்டிற்கு ஒட்டகம் மேய்க்கச் செல்லும் இளைஞன் ஒருவன் அங்கு எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறான் என்பது குறித்து இந்த படம் விவரிக்கிறது.

இதற்காக ஒட்டகம் மேய்க்கும் கதாபாத்திரமாகவே மாறிய பிரித்விராஜ் பல கிலோக்கள் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு வித்தியாசமாக மாறினார். அது மட்டுமல்ல இந்த படத்தில் அவர் ஒட்டகம் மேய்க்கும் காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

ஒட்டகத்துடனான காட்சிகள் படமாக்கப்பட்டது குறித்து பிரித்விராஜ் கூறும்போது, “ஒட்டகத்திடம் இருந்து எங்களுக்கு தேவையான ஒரு ரியாக்ஷனை பெறுவதற்காக நாங்கள் ஏழு நாட்கள் பொறுமையாக காத்திருந்தோம். அதாவது ஒட்டகம் திரும்பும் போது அதன் கண்களில் என் உருவம் தெரியும் விதமாக காட்சியை படமாக்க வேண்டி இருந்தது. ஆனால் அந்த லுக்கை ஒட்டகம் அவ்வளவு சாமானியமாக கொடுத்து விடவில்லை. ஏழு நாட்கள் பொறுமையாக காத்திருந்துதான் அந்த காட்சியை படமாக்கினோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.