ஊட்டி: `ஆவின் பாலில் புழுக்கள்’ – டீக்கடைக்காரர் புகாரை மறுக்கும் நிர்வாகம், விசாரணையில் அதிகாரிகள்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி, சேராங்கிராஸ் பகுதியில் உள்ள இளம்படுகர் சங்கம் கட்டடத்தில் தேநீர் கடை நடத்தி வருகிறார் சிவகுமார். வழக்கம்போல இன்று ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கிய இவர், பாலை கொதிக்க வைப்பதற்காக பாத்திரத்தில் ஊற்றியிருக்கிறார். அப்போது, ஏராளமான புழுக்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவகுமார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

பாலில் புழுக்கள்

புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, பால் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றிருக்கிறார். ஆவின் நிறுவன அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆவின் பாலில் புழுக்கள் இருக்க வாய்ப்பில்லை என ஆவின் நிறுவன அதிகாரிகள் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு குறித்து தெரிவித்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சிவராஜ், “டீக்கடை உரிமையாளர் சிவகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். பால் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆய்வு முடிவுகளுக்கு பின்னரே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஆவின் பால்

திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்த ஆவின் நிறுவன நீலகிரி மாவட்ட பொது மேலாளர் ஜெயராமன், “ஆவின் பாலில் புழுக்கள் இருப்பதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். பாலில் தென்பட்ட புழுக்கள் லார்வா வகையைச் சேர்ந்தது. ஈக்கள்‌ முட்டையிடுவதால் இந்த வகை புழுக்கள் உருவாகும். பால் பாக்கெட்டுக்குள் உருவாக வாய்ப்பில்லை. சம்பந்தப்பட்ட டீக்கடை உரிமையாளர் பயன்படுத்திய பாத்திரத்தில் புழுக்கள் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆவின் மீது இது போன்ற குற்றச்சாட்டை சுமத்திய சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.