திருச்சியை பறித்த திமுக.. காங்கிரஸின் திருநாவுக்கரசருக்கு கல்தா?!

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டியலில் திருச்சி தொகுதி இடம்பெறாதது சிட்டிங் எம்.பியான திருநாவுக்கரசர் தரப்புக்கு எதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பில்லையோ என்ற கேள்வியும் காங்கிரஸ் வட்டாரத்தில் கிளம்பியுள்ளன.

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2019 தேர்தலை போலவே 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கரூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுமென ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் கடந்தமுறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி, ஆரணி தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்படவில்லை என்பது கவனிக்கதக்கது.

ஸ்டாலின்

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் “திருச்சி தொகுதி இம்முறை காங்கிரஸுக்கு இல்லை என்பதை முன்கூட்டிய முடிவெடுத்துவிட்டது தி.மு.க. காங்கிரஸ் எம்.பியாக இருந்த திருநாவுக்கரசரின் செயல்பாடுகளே அதற்கான பிரதான காரணம் என்கிறார்கள்.

வாக்களித்த மக்களுக்கு அவர் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கடமைக்கு ஏதோ செய்திருக்கிறார். குறிப்பாக கொரோனா காலத்தில் எட்டிக் கூட பார்க்கவில்லை என்பதே கட்சியினர் எடுத்த சர்வே சொல்லும் செய்தியாக இருந்திருக்கிறது. மேலும் தொகுதிக்குள் அவர் வந்துசெல்லும்போதெல்லாம் அவர்மீதான அதிருப்திகள் வெளிப்பட்டன.

துரை வைகோ

எனவே மீண்டும் திருநாவுக்கரசர் போட்டியிட திருச்சியை கொடுத்தால் தோல்வி உறுதி எனக் கணக்குப் போட்டிடுக்கிறது தி.மு.க தலைமை” என்பவர்கள், தொடர்ந்து ம.தி.மு.க-வும் ஒரு காரணம் எனப் பேச தொடங்கினர்… “ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட சிவகங்கை அல்லது திருச்சி தொகுதியை ஒதுக்க வேண்டும் அழுத்தம் கொடுத்திருக்கிறார் வைகோ. விருதுநகரை கொடுக்கலாம் என்றால், அத்தொகுதியில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மீது பெரிய அதிருப்தியோ.. தொகுதியை பறிக்க திடமான காரணமோ தி.மு.க-விடம் இல்லை. ம.தி.மு.க ராஜ்ய சபா சீட் கொடுக்காமல் ஒரே ஒரு தொகுதியை கொடுத்திருக்கிறோம், எனவே அவர்கள் கோரிக்கையும் அவசியம் பரிசீலிக்க வேண்டுமென இம்முடிவை எடுத்துவிட்டது தி.மு.க” என்றார்கள்

காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “திருநாவுக்கரசர் எப்படியாவது திருச்சியை மீண்டும் பெறவேண்டும் என தொடர்ந்து காய் நகர்த்தினார். ஆனால் அவரின் எந்த முயற்சியும் பலனிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட்டே ஆகவேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் திருநாவுக்கரசர் மயிலாடுதுறை, நெல்லை தொகுதியை பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அவரின் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஏற்குமா என்பது தெரியவில்லை” என்றனர்.

திருநாவுக்கரசர்

திருச்சி தொகுதி கிடைக்காது என்ற செய்திகள் கசிந்தபோது ‘திருநாவுக்கரசர் பா.ஜ.க-வில் இணையப் போகிறார்” என்ற செய்திகள் கிளம்பின. இதனை திருநாவுக்கரசர் தரப்பே கிளப்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது திருச்சி தொகுதி கிடைக்கவில்லை, மயிலாடுதுறை கிடைக்குமா எனத் தெரியவில்லை. மயிலாடுதுறையும் கிடைக்காவிட்டால் என்ன முடிவெடுப்பார் திருநாவுக்கரசர் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.