திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் தொகுதியில் கே.சுப்புராயனும், நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை.செல்வராஜும் போட்டியிடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது பொய் பேசுகிறார். சென்னை, தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் மிதந்தபோது பிரதமர் மோடி வரவில்லை. மேலும், இன்று வரை நிவாரண நிதி ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. ஆனால், பொதுக்கூட்டங்களில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட போது தமிழக அரசு நிதி அளிக்கவில்லை என்று பொய் கூறுகிறார்.

மொழியை பற்றி பிரமாதமாக பேசுகிறார். ஆனால், தமிழ் மொழிக்கு அளிக்கப்படும் நிதி என்பது மிகக்குறைவு. தமிழக மக்கள் இதற்கெல்லாம் ஏமாற மாட்டார்கள். தேர்தல் முடிவில் அது தெரியும்.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை தீர்மானிக்கவில்லை, பிரதமர் மோடியே தீர்மானிக்கிறார். மோடி உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அமலாக்கத் துறை போன்றவற்றை கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.