சேப்பாக்கத்தில் குவிந்த சிஎஸ்கே ரசிகர்கள்..! தோனியை பார்க்க அனுமதி இல்லை

ஐபிஎல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்காக சென்னை அணி கடந்த ஒரு வாரமாக சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சிஎஸ்கே கேப்டன் தல தோனியும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடுகிறார். பேட்டிங் பயிற்சி மட்டுமே எடுக்கும் அவர், கீப்பிங் பயிற்சியை இதுவரை தொடங்கவில்லை. இதனால் அவர் இந்த ஆண்டு கீப்பிங் செய்வாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இம்பாக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால், பேட்டிங் மட்டும் அவர் இறங்குவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் ராபின் உத்தப்பாவும் கருத்து தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் அவர் பேசும்போது, தோனி இப்போது பேட்டிங் பயிற்சி மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். இதுவரை கீப்பிங் பயிற்சியை அவர் தொடங்கவில்லை. எனக்கு கிடைத்த தகவல்படி அவருக்கு முழங்கால் வலி இன்னும் சரியாகவில்லை என தெரிகிறது. கடந்த ஆண்டே களத்தில் மிகவும் சிரமப்பட்டார். ஐபிஎல் 2023 சாம்பியன் பட்டம் வென்ற கையோடு அவர் மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார். இது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அப்படியான பிரச்சனை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் எம்எஸ் தோனி கவனமாக இருப்பார். அதனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழுக்க முழுக்க இம்பாக்ட் விதிமுறையை தோனிக்காக பயன்படுத்தும் என நினைக்கிறேன் என தெரிவித்திருந்தார். அதன்படியே தோனியும் இதுவரை பேட்டிங் பயிற்சி மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறார். இப்போது அந்த அணியின் முக்கிய வீரர்கள் டெவோன் கான்வே, மதீஷா பத்திரனா உள்ளிட்டோர் காயமடைந்திருப்பதால் அந்த சிக்கலில் வேறு சிஎஸ்கே சிக்கியிருக்கிறது. அதனால் இதுவரை செய்து வைத்திருந்த வியூகங்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே மற்றும் தோனி இருக்கின்றனர்.

அதனால் தோனிக்காக மட்டுமே இம்பாக்ட் விதியை பயன்படுத்தலாம் என்ற யோசனையை சிஎஸ்கே மறுபரிசீலணை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் தான் இன்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி மேற்கொள்வதை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியிருக்கிறது. மைதானத்திற்குள் செல்ல ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கத்தில் குவிந்துவிட்டனர். ஆனால், காவல்துறையினர் ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் பெருத்த ஏமாற்றத்துடன் சிஎஸ்கே அணி பயிற்சி முடிந்ததும் ஹோட்டலுக்காக பேருந்து செல்வதை பார்க்க சிலர் சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.