பாஜக பொதுக் கூட்டம் சேலத்தில் நடைப்பெற்றது. அதில் பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுகவைவிட பலத்த கூட்டணியை அமைத்துவிட்டதா பாஜக? அதிமுக நிலை என்ன? – ஒரு விரைவுப் பார்வை.
பிரதமர் மோடி பங்கேற்ற பாஜக பொதுக் கூட்டம் செவ்வாய்கிழமை சேலத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற தலைவர்கள் பங்கேற்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
செவ்வாய்கிழமை காலை பாமக – பாஜக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாஜக பொதுக் கூட்டத்தில் பாமக பங்கேற்றது. கூட்டத்தில் ராமதாஸுக்கு கைகுலுக்கி வரவேற்றார் பிரதமர் மோடி. அதேபோல், பல மாதங்களாக பாஜக கூட்டணியில் பயணிப்போம் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூறிய நிலையிலும் அவரகள் கடந்த சில தினங்களில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்காதது விமர்சனத்துக்குள்ளானது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அவர்கள் இருவருமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தவிடுபொடியான அதிமுக கணக்கு! – அதிமுகவில் தற்போது புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் கட்சி அதிமுகவில் முக்கியமான கட்சியாக தேமுதிக மட்டுமே இருக்கிறது. அக்கட்சியும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதிலும் தொகுதிப் பங்கீடுகள் இன்னும் இறுதியாகவில்லை. இந்த நிலையில், அதிமுக கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்த பாமகவும் பாஜக பக்கம் தாவியுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சி தற்போது கூட்டணி அமைப்பதில் தள்ளாடி வருகிறது அதிமுக. இந்த நிலையில், அதிமுகவுக்கு வழங்கிய ஆதரவைத் திரும்பப் பெற்று திமுகவை ஆதாரிப்பதாக மனிதநேய ஜனநாயக மக்கள் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்தார்.
அதேபோல், முன்பு அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சிகளை மேற்கொண்டார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். பின்னர் அவர் பாஜகவில் இணைந்தார். அதன்பின் தன் கட்சியை முற்றிலுமாகக் கலைத்துவிட்டு பாஜகவில் ஐக்கியமானார். அதிமுகவில் இணையும் முக்கிய கட்சியாக பாமக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மாலையில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கை அளித்த பாமக, அடுத்த நாள் காலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
t1
இப்படியாக, அதிமுக ஒவ்வொரு முயற்சியைப் பாஜக தவிடுபொடியாக்கியது. திமுகவை அடுத்ததாக தமிழகத்தில் முக்கியமான தலைவர்கள் கட்சிகளை உள்ளடக்கி பாஜக பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. இதனை இன்று நடந்த சேலம் பொதுக் கூட்டத்தில் பாஜக நிரூபித்துவிட்டது.
அதேபோல், தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், 40 தொகுதிகளுக்கும் தேமுதிக விருப்பமனு வழங்க தொடங்கியுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அதிமுக கூட்டணியில் பாமக இணையாத சூழலில் தேமுதிகவுக்கு அதிக இடங்கள் வழங்க வாய்ப்பு இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. குறிப்பாக, 4 தொகுதிகளிலிருந்து அது 7 தொகுதி வரை அதிகரிக்கலாம்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “இன்னும் ஓரிரு நாளில் நல்ல அறிவிப்பை தருவோம். தேமுதிக யாருடன் கூட்டணி, எத்தனை சீட், எந்த தொகுதி என்பது குறித்த விவரம் அறிவிக்கப்படும்” என்றார். இதுவரை தேமுதிக – அதிமுக இடையே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில், கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. இந்த நிலையில்தான் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து முழு அறிவிப்பு வெளியாகும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
ஆகவே, அதிமுக பொறுத்தவரை எல்லாம் இழுபறியாகவே நீடிக்கிறது. இதிலிருந்து அதிமுக மீண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.