சசி தரூர் Vs டி.ராஜா வார்த்தைப் போர் – திருவனந்தபுரத்தில் வாக்குகளை பிரிப்பது யார்?

திருவனந்தபுரம்: தனக்கு எதிராக திருவனந்தப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரம் என்பது எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிக்க மட்டுமே பயன்படும்” என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வயநாட்டில் ராகுல் காந்தியின் வேட்புமனு தாக்கல் குறித்து புகார் தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவனந்தபுரத்தில் பாஜகவின் விளையாட்டை விளையாடுவது நகைப்புக்குரியது. எனக்கு எதிராக திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் நோக்கம், பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதே. இவர்கள் வயநாட்டில் கூட்டணி தர்மத்தை போதிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சதி தரூரின் இந்தக் கூற்றுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் செயலாளர் டி.ராஜா எதிர்வினையாற்றியுள்ளார். அவர் கூறுகையில், “இது ஓர் அபத்தமான கூற்று. சசி தரூர் போன்ற படித்தவர்கள் கேரளாவின் வரலாற்றை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். வகுப்புவாதம் மற்றும் பாசிசத்தை எதிர்த்து போராடுவது இடதுசாரிகள்தான். பல காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகின்றனர்.

பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை முன்னிறுத்துவதாக கூறிக் கொள்ளும் ராகுல் காந்தி ஏன் வயநாட்டில் போட்டியிட்டு இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராக போராடுகிறார். அவர்கள் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள், அவர்களுடைய அரசியல் எதிரி யார் என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “நான் 15 வருடங்களாக திருவனந்தபுரம் மக்களுக்கு சேவை செய்துள்ளேன். எனது பணியை அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நான் இங்கு இருந்திருக்கிறேன். முக்கியமான எல்லா பிரச்சினைகளிலும் பங்கேற்று இருக்கிறேன். இந்த முறை இங்கு மும்முனைப் போட்டி இருக்கும் ஏனென்றால், இடது ஜனநாயக முன்னணியிடமிருந்து நான் தொகுதியை எடுத்துக்கொண்டேன்.

t1

எனக்கு முன்பு அவர்கள் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த இரண்டும் முறை பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. அதனால் நாங்கள் இரண்டு வேட்பாளர்களையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான் வெற்றி பெறுவேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று சசி தரூர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, காங்கிரஸ் எம்.பி சசி தரூருக்கு எதிராக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை பாஜக களம் திருவனந்தபுரத்தில் இறக்குகிறது. இடது ஜனநாயக முன்னணி சார்பில் பன்னயன் ரவீந்தரன் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். அவர் கூறுகையில், “இங்கு முக்கியமான போட்டியே இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான். பாஜக திருவனந்தபுரத்துக்கு தொடர்பில்லாதது” என்று தெரிவித்துள்ளார்.


கேரளாவில் வரும் ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கேரளாவில் பாஜக ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.