உத்தரப் பிரதேசத்தில் 2 சிறுவர்களைக் கொன்ற நபர் போலீஸ் எண்கவுன்டரில் உயிரிழிப்பு

படாவுன்: உத்தரப் பிரதேச மாநிலம் படாவுனில் முடித்திருத்தும் தொழிலாளி ஒருவர் தனது அண்டை வீட்டில் வசித்து வந்த இரண்டு சிறுவர்களைக் கொடூரமாக கொலை செய்ததாகவும் மற்றொரு சிறுவனைக் காயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த நபர் போலீஸ் எண்கவுன்டரில் உயிரிழந்தார்,

உ.பி. மாநிலம் மண்டி சமிதி காவல் சரகத்துக்குட்பட்டது பாபா காலனி. அப்பகுதியைச் சேர்ந்தவர் சஜித். அதே பகுதியைச் சேர்ந்தர் வினோத் குமார். இவர் அங்கு சலூன் கடை ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில், சுஜித் வினோத்குமாரின் 11 வயது, 6 வயது மகன்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். மேலும் ஒரு சிறுவனைக் காயப்படுத்தியுள்ளார்.

சிறுவர்களைக் கொலை செய்துவிட்டு சஜித் அந்த இடத்தைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர், அவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். சிறுவர்களின் கொலையில் சஜிதின் சகோதரர் ஜாவித்தும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து படாவுன் எஸ்எஸ்பி அலோக் பிரியதர்ஷி கூறுகையில், “நேற்று இரவு 7.30 மணிக்கு குற்றம்சாட்டப்பட்ட சஜித் சம்பவம் நடந்த வீட்டுக்குள் நுழைந்ததாகத் தெரிகிறது, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த மொட்டைமாடிக்குச் சென்று அவர்களைத் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் கீழே வந்த அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றுள்ளார். கொலை செய்யப்பட்ட சிறுவர்களின் தந்தையிடம், சஜித் ரூ.5000 கடன் கேட்டதாக குடுப்பத்தினர் தெரிவித்துள்ளனர்” என்றார்.

சஜித்துடன் எந்தவிதமான தனிப்பட்ட பகையும் இல்லை எனக்கூறும் கொலையான சிறுவர்களின் தந்தை வினோத் குமார், “மனைவியின் பிரசவத்துக்காக சஜித் என்னிடம் ரூ.5000 கடனாக கேட்டிருந்தார். நானும் தருவதாக தெரிவித்திருந்தேன். பணம் வாங்குவதற்காக எங்கள் வீட்டுக்கு வந்த சஜித்துக்கு எனது இளைய மகன் தண்ணீர் கொடுத்துள்ளார். இதற்கிடையில், மூத்த மகனை பக்கதில் அழைத்துச் சென்று சஜித் கொலை செய்துள்ளார் பின்னர் இளைய மகனையும் கொலை செய்துள்ளார்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்ட சஜித் தனது பக்கத்து வீட்டுக்காரரான வினோத் குமாருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் வினோத் குமாரின் வீட்டுக்குள் நுழைந்து அவரின் குழந்தைகளான ஆயுஷ், பியூஷ், ஹனியைத் தாக்கியுள்ளார் என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

வினோத் குமாரின் வீட்டுக்குள் கொலையாளி சென்றபோது அங்கு வினோத்தின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். குழந்தைகளின் தாய் கீழே அவர்கள் நடத்தி வரும், முடிதிருத்தும் கடையில் இருந்துள்ளார். மேலே குழந்தைகளின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் மேலே சென்று பார்த்த போது சுஜித் தப்பியோடியுள்ளார்.


சம்பவம் குறித்து கேள்விப்பட்டு போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். என்றாலும் ஆத்திரத்தில் இருந்த உள்ளூர்வாசிகள் சிறுவர்களின் உடல்களை எடுக்கவிடாமல் போலீஸாரைத் தடுத்தனர். சிறுவர்களின் உறவினர்கள் உடல்களை எடுக்க வந்த ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பினர். பின்னர் அங்கு அதிக அளவில் போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டு, உடற்கூராய்வுக்காக சிறுவர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

இதற்கிடையே பரேலி ஐஜி ராகேஷ் குமார் கூறுகையில், “இன்று மாலை இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றதும் குற்றம்சாட்டப்பட்டவர் தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். அவர் போலீஸாரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினார். பதிலுக்கு போலீஸார் திருப்பிச் சுட்டதில் அவர் கொல்லப்பட்டார். குற்றவாளிக்கு 25 – 30 வயது இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் அமைதியைப் பேணும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.