காரை ஹெலிகாப்டர் போல் வடிவமைத்த நபர்; விதிகளை மீறியதாக பறிமுதல் செய்த போலீஸ்

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள கஜோரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் தன்னிடம் உள்ள காரை சுமார் 2.5 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் வடிவமைத்துள்ளார். இந்த காரை திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விழாக்களுக்கு வாடகைக்கு விடும் எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஈஸ்வர் தீன் தனது காருக்கு பெயிண்ட் அடிப்பதற்காக சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது போக்குவரத்து காவலர்கள் அவரது ‘ஹெலிகாப்டர்’ மாடல் காரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, விதிகளை மீறி காரில் மாற்றங்கள் செய்ததாக கூறி ரூ.2,000 அபராதம் விதித்த போலீசார், அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அபராதத்தை செலுத்திய பிறகு காரை போலீசார் விடுவித்துள்ளனர். இது குறித்து ஏ.எஸ்.பி. விஷால் பாண்டே கூறுகையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ‘ஹெலிகாப்டர்’ போல் வடிவமைக்கப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்ததாகவும், காரின் வடிவமைப்பை மாற்றுவதற்கு ஆர்.டி.ஓ.விடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.