புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டு டிச. 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியர், பவுத்தர்கள், ஜெயின், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
இந்த சூழலில் கடந்த 11-ம்தேதி நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அதிகாரப்பூர்வமாக அமல் செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. சிஏஏ சட்டத்தை எதிர்த்து திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அசாமில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி யாருக்கும் குடியுரிமை வழங்கக்கூடாது என்று அசாம் கணபரிஷத், அசாம் மாணவர்கள் கூட்டமைப்பு, அசாம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. சிஏஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிஅண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த அகதிகள்தரப்பிலும் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக சிஏஏ சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
t1
மனுதாரர்கள் தரப்பில் இந்திரா ஜெய் சிங், கபில் சிபல் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அசாம் மாநில அமைப்புகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ஆஜராகி வாதிட்டார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:
சிஏஏ சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதில் 20 மனுக்களில், சிஏஏ சட்டத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும்என்று கோரப்பட்டிருக்கிறது. இந்த மனுக்கள் தொடர்பாக ஏப். 2-க்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஏப்.8-ம் தேதிக்குள் மனுதாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 9-ம்தேதி நடைபெறும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
இடைக்கால தடை இல்லை: வழக்கு விசாரணையின்போது சிஏஏ சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றுமனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. இதை தலைமை நீதிபதி ஏற்கவில்லை.