Ilaiyaraaja: “இளையராஜா, ரஜினி பயோபிக்கில் நடிக்க ஆசை; ஒன்று நடந்துவிட்டது, மற்றொன்று…!" – தனுஷ்

இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்கிறார் தனுஷ். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்திற்கும் ‘இளையராஜா’ என்றே பெயர்.

இந்நிலையில் இப்படத்திற்கானத் தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இவ்விழாவில் பேசிய நடிகர் தனுஷ், இளையராஜாவாக நடிப்பது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

இளையராஜா, கமல், தனுஷ்

இது குறித்து பேசியிருக்கும் தனுஷ், “எண்ணம் போல் வாழ்க்கை’ என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. பல இரவுகளில் நான் இளையராஜா பாடலைக் கேட்டு அவருடைய பயோபிக்கில் நடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து மனதிற்குள்ளேயே நடித்துப் பார்த்திருக்கிறேன். அது இப்போது நடந்திருக்கிறது.நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஒன்று இளையராஜா சார், மற்றொன்று ரஜினி சார் பயோபிக்.

அதில் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது நனவாகியிருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய கர்வத்தைக் கொடுக்கிறது.

நான் இளையராஜா சாரோட ரசிகன், பக்தன். அவருடைய இசைதான் எனக்குத் துணை. இது எல்லோருக்கும் பொருந்தும். இதைத் தாண்டி அவரது இசை என் நடிப்பின் ஆசான். அவருடைய இசையைக் கேட்டு அந்த உணர்வை உள்வாங்கிக் கொண்டுதான் நடிப்பேன். இது வெற்றிமாறனுக்கு நன்றாகத் தெரியும். இளையராஜாவாக, அவரது பயோபிக்கில் நடிப்பது கஷ்டம் என்று எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். எனக்கு அது கஷ்டமாகத் தெரியவில்லை. அவருடைய இசையைக் கேட்டு அப்படியே எளிதாக நடித்து விடுவேன். அவரின் இசையே எனக்கு அதை சொல்லிக் கொடுத்துவிடும். ஒரு கலைஞனாக இது எனக்கு மிகவும் பெருமையானது. இதற்கான அழைப்பு இளையராஜா சாரிடமிருந்து வந்தது இன்னும் மகிழ்ச்சியானது. இசையாகவே, இசை ஞானியாகவே, இசையின் கடவுளாகவே நடிப்பதற்கான வாய்ப்பை அந்த சிவன் எனக்குக் கொடுத்திருக்கிறார்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.