கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அருகே ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவ் அதை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் சமீப காலமாகவே அவருக்கு ஒற்றை தலைவலி இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 14ம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி, வாந்தி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.
அதில் ஜக்கி வாசுதேவின் மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூளை நரம்பியல் நிபுணர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ரத்தக்கசிவை சரி செய்தனர். செயற்கை சுவாச சிகிச்சையில் இருந்த ஜக்கி வாசுதேவ், தற்போது அது அகற்றப்பட்டு குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் அவர் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறியிருக்கின்றனர்.
இதுகுறித்து ஜக்கி வாசுதேவ் தன் அதிகாரபூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இங்குள்ள மருத்துவர்கள். என் தலையில் உள்ள பிரச்னையை கண்டறிய அறுவை சிகிச்சை செய்தனர்.
ஆனால் எதுவும் இல்லை. மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நான் நலமுடன் உள்ளேன்.” என்று சிரித்துக்கொண்டே நகைச்சுவை உணர்வுடன் கூறியது வைரலாகி வருகிறது.