டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, 2021-ல் கொண்டுவந்த புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்தது. அதையடுத்து, அமலாக்கத்துறை பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து மணீஷ் சிசோடியாவை சிறையிலடைத்தது. பின்னர், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் பணமோசடி சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கை கடந்த அக்டோபரில் அமலாக்கத்துறை கைதுசெய்தது.
அதன்பிறகு, முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காகத் தொடர்ச்சியாக சம்மன் அனுப்பிவந்தது அமலாக்கத்துறை. ஆனால், அனைத்து சம்மன்களிலும் பாஜக-வின் அரசியல் தலையீடு இருப்பதாகத் தொடர்ச்சியாக அதனைப் புறக்கணித்துவந்தார்.
இதற்கிடையில், இதே மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மக்கள் கவிதாவை கடந்த வாரம் அமலாக்கத்துறை கைதுசெய்தது. இவ்வாறிருக்க, அமலாக்கத்துறை அனுப்பிய 9-வது சம்மனையும் கெஜ்ரிவால் நேற்று புறக்கணித்தார். அதேசமயம், அமலாக்கத்துறை தன்னை கைதுசெய்வதிலிருந்து தனக்கு இடைக்கால பாதுகாப்பு அளிக்கக் கோரிய கெஜ்ரிவால் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவரின் கோரிக்கையை நிராகரிக்க நேற்றிரவு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைதுசெய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை பிறகு, தன்னுடைய வாழ்வே நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதாக கெஜ்ரிவால் தற்போது தெரிவித்திருக்கிறார்.
அமலாக்கத்துறையால் டெல்லியில் விசாரணைக்காக ரூஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “எனது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. நான் சிறையில் இருந்தாலும் நாட்டுக்கு சேவை செய்வேன்” என்று கூறினார். பின்னர், நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலே இந்த ஊழலின் மூளையாகச் செயல்பட்டார் என வாதம் செய்த அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்தது.