2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இதனால் ஆ.ராசா, கனிமொழி போட்டியில் சிக்கல் வராது என்பது தெரிய வந்துள்ளது.
வழக்குப் பின்னணி? – காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை (சிஏஜி) சுட்டிக் காட்டியது.
இந்த ஊழல் வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டில் சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மே மாதத்தில் இருந்து விசாரணை தொடங்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி வேட்பாளராக கனிமொழியும், நீலகிரி வேட்பாளராக ஆ.ராசாவும் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு எதிரான மனு விசாரிக்கப்பட உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா, தவறா என்பது குறித்த வாதங்கள் மட்டுமே மேல்முறையீட்டு மனுவில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடக்கும். எனவே, டெல்லி உயர் நீதிமன்றத்தின் மிக விரைவாக முடிவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
போட்டியிட தடை ஏற்படுமா? – மே மாதம் தான் விசாரணை தொடங்கும். ஆனால், தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்துவிடும். அதன்பின், ஜூன் 4-ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும். எனவே, விசாரணை தொடங்கினால்தான் இருவருக்கும் ஏற்படப்போகும் சிக்கல் என்னவென்று தெரியும். அதனால் தேர்தலில் போட்டியிடுவதில் தடை ஏதும் இருக்காது.