பாஜக பெற்ற ‘ப்ரீப் பெய்டு’, ‘போஸ்ட் பெய்டு’ லஞ்சம் எவ்வளவு? – காங்கிரஸ் பட்டியல்

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சி, “வெளிப்படைத் தன்மையில்லாத இந்தத் திட்டமானது வங்கிகள் மூலமாக, ப்ரீப் பெய்டு, போஸ்ட் பெய்டு மற்றும் ரெய்டுக்கு பின்பாக என லஞ்சம் பெறுவதை உறுதி செய்துள்ளது” சாடியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று உறுதிளித்த பிரதமர் மோடி, ஊழலை சட்டப்பூர்வமாக்கி விட்டு இப்போது அதனை மறைக்க முயற்சி செய்கிறார். இந்த அப்பட்டமான ஊழல், நான்கு வழிமுறைகளில் நடந்துள்ளன.

முதலவாதாக, ‘நன்கொடை கொடு, வாய்ப்பைப் பெறு’. அதாவது, ப்ரீப் பெய்டு லஞ்சம். இரண்டாவதாக, ‘ஒப்பந்தம் பெறு, லஞ்சம் கொடு’. அதாவது போஸ்ட் பெய்டு லஞ்சம்; மூன்றாவது வழிமுறை என்பது ‘ஹாஃப்தா வசூல்’. அதாவது ரெய்டுக்கு பின்னர் லஞ்சம். முதலில் நிறுவனங்களுக்கு சோதனை செய்ய அமலாக்கத் துறை, சிபிஐ அனுப்பப்படும், அதிலிருந்து தப்பிக்க அந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் வாங்கும். நான்காவது, ஷெல் நிறுவனங்களின் பயன்பாடு.

தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடை வழங்கியதன் மூலம் 38 கார்ப்பரேட் நிறுவனங்கள், 179 முக்கியமான ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களை மத்திய மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகளிடம் இருந்து பெற்றுள்ளது பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.2,004 கோடி நன்கொடை வழங்கியதன் மூலமாக மொத்தம் ரூ.3.8 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.

41 கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக 56 அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை சோதனைகளுக்கு ஆளாகியுள்ளன. இந்நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ.2,592 கோடி கொடுத்துள்ளன. இதில் ரூ.1,853 கோடி விசாரணை அமைப்புகளின் சோதனைக்குப் பின்னர் கொடுக்கப்பட்டுள்ளது” என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.

மேலும், “இந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தேர்தல் பத்திர ஊழலை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். அதானி விவாகாரத்தை விசாரிக்க கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்படும். அதபோல், பி.எம். கேர்ஸ் ஃபண்ட் குறித்து சிறப்பு குழு மூலம் விசாரிக்கப்படும்” என்றார் அவர்.

பிரதமர் மோடி இதுவரை தேர்தல் பத்திர விவகாரம் குறித்துப் பேசவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசிவருகிறார். எல்லாவற்றையும் தாண்டி, “நாங்கள் ஊழல் கறை படியாதவர்கள்” என்று பேசிவந்த பாஜகவினர் தற்போது, “எதிர்க்கட்சிகள் மட்டும் என்ன உத்தமமா?” என்று கேட்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். | விரிவான அலசல் கட்டுரை > மக்களவை மகா யுத்தம்: திருப்புமுனையாகுமா தேர்தல் பத்திர விவகாரம்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.