சென்னை: மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வேட்பாளராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 தொகுதிகள் பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிடுகிறது. இதில் ஈரோடு தொகுதி வேட்பாளராக விஜயகுமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அதேபோல ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக வேணுகோபால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தூத்துக்குடி வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.