சென்னை: ரஷ்யாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புறநகர் பகுதியில் அரங்கு ஒன்றில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென 4 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுதொடர்பாக இந்திய ரஷ்ய தொழில்வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் பி.தங்கப்பன் டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டென்னிஸ் அலிபோவுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் உயிரிழந்த துயர சம்பத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
தீவிரவாதம் ஏற்கத்தக்கதல்ல.. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இக்கட்டான சூழலில் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அது ஏற்கத்தக்கதல்ல. ரஷ்ய அதிபருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. இவ்வாறு இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.