`இதைச் செய்யுங்கள்… மாதத்தில் 2 நாள்கள் தேனியில் தங்குகிறேன்!' – பிரசாரத்தில் உறுதியளித்த உதயநிதி

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டியில் தேவர் சிலை முன்பு தேனி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின்

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த 2019 எம்.பி தேர்தலிலும், 2021 எம்.எல்.ஏ தேர்தலிலும் உசிலம்பட்டி மக்கள் தி.மு.க-வை ஏமாற்றிவிட்டீர்கள். மறுபடியும் ஏமாற்றினால் நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள். கடந்த 2019-ல் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஒவ்வொரு தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால் இந்த தொகுதியை நான் நம்ப மாட்டேன், இந்த முறை அதை சரி செய்து தங்க தமிழ்ச்செல்வனை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

இப்போது நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் பல அணிகள் உள்ளன. அந்த ஐ.பி.எல் போட்டியும் அ.தி.மு.க-வும் ஒன்றுதான். அதிமுகவில் டி.டி.வி.அணி, ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி, இ.பி.எஸ் அணி, மோடி அணி, ஜெ.தீபா.அணி, ஜெ.தீபாவின் டிரைவர் அணி என பல அணிகள் உள்ளன. இவர்கள் எல்லோரும் ஒரு டீமில்தான் விளையாடுவார்கள்.

உசிலம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின்

தேனி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்… தேனியில் மாதம் 2 நாள்கள் உங்களோடு தங்குகிறேன்” என்றார்.

இதையடுத்து ஆண்டிபட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரத்திற்கு இரவு 10 மணிக்கு மேல் வந்தார். பத்து மணிக்கு மேல் தேர்தல் விதிப்படி பிரசாரம் செய்யக் கூடாது என்பதால், பிரசார வேனில் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றுவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.