சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் ஷெக்மேட் என்ற தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் மற்கூரை, வியாழக்கிழமை இரவு எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடலை மீட்கும் பணியில் காவல் துறை மற்றும் கமாண்டோ படையினர் ஈடுபட்டனர்.
ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கேளிக்கை விடுதி அப்பகுதியில் உரிய உரிமத்துடன் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் போட்டியைக் காண இந்த விடுதிக்கு வருவதற்கு பலரும் முன்பதிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த மூவரும் வடமாநிலத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில் பணி காரணமா? – 3 பேர் உயிரிழந்த கேளிக்க விடுதியின் அருகோ, மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக, கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளனதாக போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்பவ இடத்துக்கு தற்போது பேரிடர் மீட்புப் படையினர் வந்துள்ளனர்.