திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா உடன் தகராறு: முன்னாள் வேட்பாளர் கட்சிப் பதவி பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா உடன் அக்கட்சியை சேர்ந்த ஜோதிமுத்து தகராறு செய்ததாக கூறி அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இவர் கடந்த முறை மக்களவை தொகுதியில் போட்டியிட்டவர்.

திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ஜோதிமுத்து. இவர் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க., வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். தற்பாது இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இம்முறை அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார். தொகுதிக்குள் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பை தொடர்ந்து சட்டமன்ற தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

ஒட்டன்சத்திரத்தில் இரு தினங்களுக்கு முன்பு பாஜக, பா.ம.க., மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டம் முடிந்தநிலையில் உணவு வந்துசேர தாமதம் ஆனது. அதற்குள் வேட்பாளர் திலகபாமா அங்கிருந்த காரில் புறப்பட்டார்.

நான் ஏற்பாடு செய்கிறேன் என்றால் கேட்கவில்லை. நீங்களே உணவு ஏற்பாடு செய்துகொள்கிறீர்கள் என சொல்லிவிட்டு தற்பொழுது வந்தவர்களுக்கு உணவு கொடுக்க முடியவில்லை. அதற்குள் புறப்பட்டு செல்கிறீர்களே என ஜோதிமுத்து, வேட்பாளர் திலகபாமாவிடம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த திலகபாமா, எனக்கு முக்கிய வேலை உள்ளது செல்லவேண்டும் என்றபோதும் காரை மறித்து வந்தவர்களுக்கு உணவு வந்தவுடன் செல்லுங்கள் என கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் காத்திராமல் உடனடியாக அங்கிருந்து திலகபாமா புறப்பட்டுச்சென்றார்.

நடந்த நிகழ்வுகள் குறித்து, ஒரு பெண் என்றும் பாராமல் எனது காரை மறித்து மாவட்டச்செயலாளர் ஜோதிமுத்து அனைவரின் மத்தியில் தகராறில் ஈடுபட்டார் என பா.ம.க., தலைமைக்கு வேட்பாளர் திலகபாமா புகார் செய்துள்ளார். இதன் விளைவாக உடனடியாக ஜோதிமுத்து மாவட்டச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இதை அறியாத ஜோதிமுத்து, திண்டுக்கல்லில் நடந்த வேட்பாளர் அறிமுகக்கூட்டத்திலும் பங்கேற்றார். பின்னர் தான் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கே தெரியவந்தது. இதையடுத்து நேற்று நத்தத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜோதிமுத்து பங்கேற்கவில்லை.

இதுகுறித்து ஜோதிமுத்து கூறுகையில், “வேட்பாளர் திலகபாமா கட்சி நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் அவராகவே தனித்து செயல்படுகிறார். எனக்கு அவரது செயல்பாடுகள் ஒத்துவரவில்லை. எனவே கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன். கட்சியில் தொடர்ந்து செயல்படுவேன்” என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.