விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

சென்னை: மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதுதவிர கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் விசிக போட்டியிடுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னத்தை, பொதுவான சின்னமாக ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வாக்கு பெற்றதாகக் கூறி, விசிகவின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக தொடர்ந்த வழக்கில், கடந்த தேர்தல்களில் ஒரு சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகள் பெற்றது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, விசிகவுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய முடிவு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன், கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக மேல்முறையீடு செய்துள்ளது.

விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், கூட்டணிக் கட்சியினர் விசிகவுக்கு பானை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் வீடியோ பதிவை அவர் பகிர்ந்திருந்தார். அத்துடன், 2024 மக்களவைத் தேர்தலில் நமது சின்னம் `பானை’. இந்தச் சின்னம் நமது உரிமை. இந்த சின்னம் கிடைக்கும் என்பதில் மிக உறுதியாய் நிற்கிறோம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா ஒதுக்கீடு செய்துள்ளார். அதேபோல் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம்: திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இவருக்கு பம்பரம் சின்னம் மறுக்கப்பட்ட நிலையில், தீப்பெட்டி சின்னம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதன்படி, அவருக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்து திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.