“தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது” – தொண்டர்களிடம் பழனிசாமி பெருமிதம்

சேலம்: “நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது. 520 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்து ஆட்சியில் அமர்ந்த கட்சி திமுக. இந்த வாக்குறுதிகளில் இதுவரை 10 சதவீதத்தைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை” என்று சேலத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம் வீரப்பன்பாளையம் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. இத்தொகுதியில் உள்ள ஒவ்வொருவரையும், எம்எல்ஏவாகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் பார்க்கிறேன். தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அப்படி செல்லும்போது அனைத்து இடங்களிலும் எடப்பாடி என்றுதான் எழுதியுள்ளனர்.

ஒருசில இடங்களில்தான் எனது பெயர் எழுதப்பட்டுள்ளது. நூற்றுக்கு 90 சதவீதமான இடங்களில் எடப்பாடி என்றுதான் எழுதியுள்ளனர். இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கும் அத்தனை பேரும்தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர்கள். எடப்பாடி என்று சொன்னாலே, அந்தப் பகுதியைச் சார்ந்த அனைவரையும் அந்த பெயர் குறிக்கும். அதிமுகவின் வெற்றி உங்கள் அனைவரையும் சார்ந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. அதில், அதிமுக வேட்பாளர்களிலேயே அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தொகுதி எடப்பாடி சட்டமன்ற தொகுதி.

சுமார் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். இந்தமுறை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்தத் தொகுதியில் மக்கள் வைத்த கோரிக்கைகள் முழுவதையும் நிறைவேற்றித் தந்துள்ளோம். தமிழகத்துக்கே ஒரு முன்மாதிரி சட்டமன்ற தொகுதியாக எடப்பாடி தொகுதி விளங்கி வருகிறது. இன்னும் நிறைய திட்டங்களைச் செய்யலாம், அதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் கூட்டணி அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது. தமிழகம் புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது. நாற்பதுக்கு நாற்பது என அனைத்திலும் அதிமுக வெற்றி பெறும்.

தமிழகத்தில் பிரதான தொழில்களாக இருக்கக் கூடிய கைத்தறி, விசைத்தறி மற்றும் வேளாண்மை என மூன்றுமே பாதிக்கப்பட்ட ஆட்சிதான், திமுகவின் ஆட்சி. 520 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்து ஆட்சியில் அமர்ந்த கட்சி திமுக. இந்த வாக்குறுதிகளில் இதுவரை 10 சதவீதத்தைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.