வடதமிழகத்தில் வெப்பநிலை 105 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வடதமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். தென் தமிழகம், காரைக்கால், டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இந்த நிலையில், தென் தமிழகம், டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இன்று (ஏப்.3) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.

தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஏப்.6-ம் தேதி வரையிலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 37 டிகிரி பாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102 டிகிரி வரையும், கடலோர பகுதிகளில் 98 டிகிரி வரையும் உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 78டிகிரி முதல் 96 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

தமிழகத்தில் காற்றின் ஈரப்பதம் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 சதவீதம், மற்ற நேரங்களில் 40-70 சதவீதம், கடலோரபகுதிகளில் 50-80 சதவீதம் என்ற அளவில் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும்அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செ.மீ., தேனி மாவட்டம் மஞ்சளாறில் 2 செ.மீ., கோவை மாவட்டம் சின்கோனா, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பாக இருந்தது. இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.