அவரை போன்ற வீரரை கழற்றிவிட்டால் எப்படி வெற்றிபெற முடியும்..? – ஆர்.சி.பி மீது வாட்சன் அதிருப்தி

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள 17 லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்க்கதா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

கோலி, டு பிளெஸ்சிஸ், மேக்ஸ்வெல், க்ரீன், தினேஷ் கார்த்திக், சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களை கொண்ட பெங்களூரு அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதனால் பெங்களூரு ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

பெங்களூரு அணியால் தற்போது உள்ள பவுலிங்கை வைத்துக்கொண்டு கோப்பையை வெல்ல முடியாது என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், யுஸ்வேந்திர சாஹல் போன்ற தரமான பவுலரை பெங்களூரு அணியினர் கழற்றி விட்டதை இப்போதும் தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

யுஸ்வேந்திர சாஹல் சர்வதேச அளவிலும் ஐ.பி.எல் தொடரிலும் நீண்ட காலமாக அசத்தி வருகிறார். சாஹல் அதிக ரன்களை கொடுக்க மாட்டார். அதே சமயம் சிறந்த பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவார். அதை தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு போட்டியிலும் செய்து வரும் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றுள்ளதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

மும்பைக்கு எதிரான போட்டியில் அவர் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை எடுத்தது தான் வெற்றியின் திருப்பு முனையாக அமைந்தது. அந்த வகையில் மீண்டும் சாஹல் நன்றாகவே செயல்பட்டார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு வீரரை ஆர்.சி.பி ஏன் வெளியே விட்டார்கள்..? என்பதைப் பற்றி நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அவரை போன்ற வீரரை கழற்றிவிட்டால் எப்படி வெற்றிபெற முடியும். இவ்வாறு அவர் கூறினார். தற்போது ராஜஸ்தான் அணியின் முதன்மை வீரராக விளையாடி வரும் சாஹல் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.