அகவிலைப்படி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பதிவாளர் உள்ளிட்டோருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக ஓய்வூதியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ரூ.10 ஆயிரத்துக்குக் குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரசு நிறுத்திவிட்டது.

திமுக ஆட்சி அமைந்து 1,000 நாட்களைக் கடந்தும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல்வேறுபோராட்டங்களை நடத்தியபோதும் அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்த விவகாரத்தில் ஓய்வூதியர் நலச் சங்கங்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அகவிலைப்படி உயர்வை 2022 நவ.25-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நீதிபதி சத்ய நாராயண பிரசாத் உத்தரவிட்டார். ஆனால், அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கும் 7 மாதங்களுக்கு மேலாக விசாரணைக்கு வராமல் காலம் தாழ்த்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து ஓய்வூதியர்கள் மன உளைச்சலுடன் வாழ்ந்து வருகிறோம். எனவே, ஓய்வூதியர்கள் நலன் கருதி வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பதிவாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வருகிறோம். இதுவரை சென்னையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கடிதங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏப்.15-ம் தேதிக்குள்ளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பி உள்ளோம்.

எங்கள் நோக்கம் நீதித்துறையை தொந்தரவு செய்வது அல்ல. ஓய்வூதியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியே கடிதம் அனுப்பி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.