“இந்தியா கூட்டணியை சேர்ந்த பாதிபேர் ஜெயிலில், மீதிபேர் பெயிலில்..!” – விருதுநகரில் ஜே.பி.நட்டா

விருதுநகர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இந்த பூமி, சனாதனம், பாரம்பரியம் கலாசாரத்தை தாங்கி நிற்கிற பூமி. எத்தனையோ தலைவர்கள், சமுதாய மாற்றத்திற்காக உழைத்து இருக்கக்கூடிய நிலமாக இந்த பூமி விளங்குகிறது. நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாசாரம், தமிழர் பண்பாடு, தமிழ் மொழி என அனைத்திலும் ஒரு தமிழராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடி வெளிநாடு சென்றாலும் பிற நாட்டு சபைகளுக்கு சென்றாலும், கூட்டங்களில் கலந்து கொண்டாலும் பிரசாரங்கள் மேற்கொண்டாலும் அனைத்து இடங்களிலும் தமிழ்மொழியை உயர்த்தி பிடிக்கின்ற வகையில் தமிழ் வரலாறுகளை பின்பற்றுகிறார். தமிழ் கவிதைகள், தமிழ் இலக்கியங்களை மேற்கோள்காட்டி பேசுகிறார். சமீபத்தில் கூட கட்டமைக்கப்பட்ட நாட்டின் புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு வலதுபுறமாக தமிழ் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பான செங்கோலை நிறுவி தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஆனால் காங்கிரஸூம், தி.மு.க. அரசாங்கமும் தமிழ் கலாசாரத்திற்கு எதிராக வேலை செய்கின்றன. நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியதற்கக்கூட காங்கிரஸ் மற்றும் தி.மு.க. அரசாங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

பிரதமர் மோடியின் திறமையான ஆட்சி நிர்வாகத்தின் பயனால் உலக அளவில் பொருளாதாரத்தில் 14வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறது. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க‌. வேட்பாளர் ராதிகா சரத்குமார் வெற்றி பெறும் நேரத்தில் மத்தியில் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க. அரசில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்பார். அந்த சமயம் 2027-க்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எலக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தி வளர்ச்சி ஏழு சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

பரப்புரை கூட்டம்

அதேபோல எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. தற்போது நாம் பயன்படுத்தும் செல்போன்கள் எல்லாம் இதற்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டவையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பின்பு உயர்ந்திருக்கும் எலக்ட்ரானிக் சாதன உற்பத்தி வளர்ச்சியினால் அனைத்து முன்னணி செல்போன்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. அதன் மூலமாக மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது. மருந்து பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியின் வளர்ச்சி விகிதம் 138% உயர்ந்திருக்கிறது. பெட்ரோகெமிக்கல் பொருட்களின் உற்பத்தி ஏற்றுமதி 106 சதவீதம் உயர்ந்திருக்கிறது‌.

பிரதமர் நரேந்திர மோடி விளிம்பு நிலை மக்களுக்காகவும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும், பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களின் நலனுக்காகவும் நாள்தோறும் சிந்தித்து செயலாற்றுகிறார். மத்திய அரசின் திட்டத்தின் மூலமாக நாட்டில் 80 கோடி மக்கள் மாதாமாதம் 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வாங்கி பயனடைகின்றனர்.

பரப்புரை

பிரதம மந்திரியின் அனைத்து மக்களுக்கான திட்டங்களின் அடிப்படையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 25 கோடிக்கும் அதிகமானவரின் வாழ்க்கைத் தரம் தற்போது உயர்ந்திருக்கிறது. பிரதம மந்திரியின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயியும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் என வருடத்திற்கு 6000 ரூபாய் பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 11 கோடியே 78 லட்சம் விவசாயிகள் பயனடைகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தை உயர்த்தும் வகையில் உஜ்வாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ், கீழ் நாடு முழுவதும் தோராயமாக 10 கோடிக்கும் அதிகமான இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் 40 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகளும், இப்பகுதியில் மட்டும் 2.50 லட்சம் எரிவாயு இணைப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தில் நாடு முழுவதும் 11.50 கோடி பேருக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 55 கோடி மக்கள் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாயை மருத்துவ காப்பீட்டு நிதியாக பெற்றிருக்கிறார்கள்‌. தமிழ்நாட்டில் மட்டும் 77 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள். நாடு முழுவதும் சிறப்பான ஆட்சியை பிரதமர் மோடி வழங்கினாலும், தமிழ்நாட்டின் மீது தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி இருக்கிறார்.

வரவேற்பு

தமிழ்நாட்டில் ரயில்வே துறை வளர்ச்சி ஏழு மடங்கு அதிகமாக்கி பிரதமர் மோடி செய்திருக்கிறார். 11 ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. தொழிற் பூங்காக்கள், பாதுகாப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி திட்டங்கள் தீட்டியிருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சி என இரண்டு கட்சிகளுமே ஊழல் நிறைந்த கட்சிகள், இரண்டுமே குடும்பத்திற்கான கட்சிகள். தி.மு.க. என்றால் குடும்பத்திற்காக பணத்தை கொள்ளையடிக்கும் கட்டப்பஞ்சாயத்து கழகம் என்று பொருள். இதுவே காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால் நிலக்கரி ஊழல், அகஸ்தா வெஸ்ட் லேண்ட் ஒப்பந்த ஊழல், 2ஜி, 3ஜி ஊழல், நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்த ஊழல் என ஊழல்களால் நிறைந்த கட்சி. இது மட்டுமல்ல இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் குடும்பக் கட்சிகள் மற்றும் ஊழல்வாத கட்சிகள். அதை தவிர அந்த கூட்டணியில் வேறு எதுவுமே இல்லை. பிரதமர் நரேந்திர மோடி ஊழலை ஒழிப்பதற்காகவும் ஊழல் செய்கிறவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால் இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் ஊழல்வாதிகள். ஊழல்வாதிகள் யார் யாரோ அவர்களை காப்பாற்றுவதற்காக அவர்கள் அனைவருமே ஒரு கூட்டமாக சேர்ந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகிய இருவருமே ஊழல் வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்கள்.

அதுபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் மீதுள்ள ஊழல் வழக்காக அவர்களும் ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் ஊழல் குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறார்கள். இப்படி இந்தியா கூட்டணியில் உள்ள பாதி பேர் ஊழல் குற்றச்சாட்டில் ஜெயிலில் இருக்கிறார்கள், பாதிபேர் பெயிலில் இருக்கிறார்கள். இதுதான் இந்த கூட்டணியில் நிலைமை. அதேபோல இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுமே குடும்ப கட்சி என்பதையும் நிரூபிக்க முடியும்‌. காங்கிரஸ், தி.மு.க. முதல் இண்டியா கூட்டணியில் உள்ள எல்லாக்கட்சிகளிலும் குடும்ப அரசியல் உள்ளது. ஆகவே ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை தண்டிப்பதற்கும், நாட்டை ஊழல் இல்லாத நாடாக மாற்றுவதற்கும் மக்கள் அனைவரும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்” எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.