தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ்

சென்னை: இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது உள்ளிட்ட அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஏமாற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்கு அரசின் நிதி நெருக்கடிதான் காரணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை. அதேபோல், மத்தியில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறுவது மோசடியாகும்.

7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமாகும்போது, தமிழகத்தில் மட்டும் அதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது.

மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை அரசு ஊழியர்களும், பொதுமக்களும் வீழ்த்த வேண்டும். அவ்வாறு வீழ்த்தினால், அதற்கு அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.