புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய அசையும் சொத்துகளைப் பற்றிய தகவல்களை அளிக்கும்போது அவை பெரும் மதிப்பு கொண்டவையாக, ஆடம்பர வாழ்க்கை முறையைச் சார்ந்தவையாக இல்லாதபட்சத்தில் அவற்றைப் பட்டியலிடத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேசு தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் கரிக்கோ க்ரி. இவரது வெற்றியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் வேட்புமனுவில் தனது அசையும் சொத்து விவரங்களை மறைத்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அந்த மனுவில், கரிக்கோ வேட்புமனு தாக்கலின்போது தனது மனைவி, மகனுக்குச் சொந்தமான 3 வாகனங்கள் பற்றி குறிப்பிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு, “தேர்தலில் போட்டியிடுவோரின் ஒவ்வொரு சொத்து விவரம் பற்றியும் தெரிந்து கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு இல்லை. ஒரு வேட்பாளருக்கு தனது வேட்பாளர் அந்தஸ்துக்கு சம்பந்தப்படாத தகவல்களை தெரிவிக்காமல் இருப்பது அவரது தனிநபர் உரிமை சார்ந்தது. எனவே, குவாஹாத்தி நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து கரிகோ க்ரியின் வெற்றி செல்லும்” என்று தீர்ப்பளித்தது.
முன்னதாக, கரிக்கோவின் வழக்கறிஞர், “அந்த வாகனங்கள் அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்னர் பரிசாகக் கொடுக்கப்பட்டுவிட்டது, சில விற்கப்பட்டது” என்று வாதிட்டார். அதனை நீதிமன்றம் குறித்துக் கொண்டு, “அத்தகைய சூழலில் அவற்றை கரிக்கோவுக்கு சொந்தமானது எனக் குறிப்பிட முடியாது” என்றது.
மேலும், “ஒரு வேட்பாளர் தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வெட்டவெளிச்சமாக வாக்காளர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்புடையதாகக் கருதவில்லை. வேட்பாளரின் தனிநபர் உரிமையும் பேணப்பட வேண்டும். அந்த வகையில் அவர் வேட்பாளராக இருப்பதற்கு சம்பந்தப்படாத தகவல்களை அவர் தெரிவிக்கத் தேவையில்லை.
வேட்பாளரின் ஒவ்வொரு உடைமை பற்றியும் தகவல் இடம்பெறவில்லை என்பது அவர் தேர்தல் விதிமுறைகளை மீறியது என்ற அர்த்தமாகாது. அதேவேளையில் எந்த உடைமை / சொத்து அவரது வேட்பாளர் தன்மை மீது தாக்கத்தை ஏற்படுத்துமோ அவற்றைப் பற்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
ஒரு வேட்பாளர் தனது உடைகள், ஆடைகள், சமையலறைப் பொருட்கள், எழுது பொருட்கள், மரச் சாமான்கள் (அதிக மதிப்பில்லானவை) அல்லாதவை ஆகியனவற்றைப் பற்றி விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவை ஆடம்பர வாழ்க்கை முறையைக் குறிக்கக் கூடியது என்றால் நிச்சயமாகத் தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் வழிகாட்டுதல்களை முன்வைத்தனர்.