சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த விஷ்ணு விஷால், சூரி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷ்ணு விஷால், சூரி இருவரும் இணைந்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் நல்லதொரு வெற்றியைப் பெற்ற படம். அந்தப் படத்தில் இருவரது நகைச்சுவை நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தது.

'வெண்ணிலா கபடி குழு' படத்தில் விஷ்ணு விஷால் அறிமுகமானார். சூரி அந்தப் படத்தில் நகைச்சுவை நடிகராக பிரபலமானார். அதன்பின் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அதன்பின் இருவருக்கும் இடையே நடந்த நிலத்தகராறு விவகாரம் ஒன்றில் பிரிந்தனர்.

விஷ்ணு விஷாலின் அப்பாவும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடாவ்லா, நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சூரி புகார் அளித்தார். உயர் பதவியில் இருந்ததால் அவர் மீது விசாரணை நடத்த காவல் துறை தயங்குவதாக சூரி தரப்பிலும் பேசப்பட்டது. பின்னர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார் சூரி.

அதன்பின் அளித்த பேட்டி ஒன்றில் சூரியுடன் எதிர்காலத்தில் இணைந்து நடிக்கவே மாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஆனால், சமீபத்தில் 'லால் சலாம்' படத்திற்கான பேட்டி ஒன்றில் சூரியுடன் பேசியுள்ளதாகவும், தங்களுக்கு இடையிலான பிரச்சினையில் மூன்றாம் நபர் ஒருவர் நுழைந்ததே சிக்கலுக்குக் காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சூரியுடனும், தன்னுடைய அப்பாவுடனும் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், “எதற்கும், யாருக்கும் காலம் ஒன்றே பதில் சொல்லும். நல்லதே நடக்கட்டும் சூரி அண்ணா, லவ் யு அப்பா,” என்று பதிவிட்டுள்ளார். அதை மீண்டும் பகிர்ந்து, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே, நன்றிங்க,” என சூரி பதிலளித்துள்ளார்.

அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர எதிரிகளும், நண்பர்களும் இல்லை என்பதை இருவரும் மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.