தயாரிப்பாளர் கில்டு தேர்தலை நடத்த கோர்ட் உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போன்று செயல்படும் இன்னொரு சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம், இதனை 'தயாரிப்பாளர் கில்டு' என்று சுருக்கமாக அழைப்பார்கள். இந்த சங்கத்தின் தற்போதைய தலைவராக சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் இருக்கிறார்.

சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் மோதல் காரணமாக கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடக்கவில்லை. தலைவராக தொடர்ந்து ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் சங்கம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் சங்கத்தின் செயலாளராக இருந்த எம்.ஜம்பு என்பவர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 2024-2026 காலத்திற்கான தேர்தலை நடத்த உத்தரவிட்டது. தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கவும், உத்தரவிட்டது.

அதன்படி தேர்தல் அதிகாரிகளாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், வி.பாரதிதாசன் ஆகியோர் நியமிக்கப்படிருக்கிறார்கள். மார்ச் 30ம் தேதி வரை தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியலை தயாரித்து, ஆய்வு செய்து பட்டியலை அறிவிப்பு பலகையில் 3 வாரங்களுக்குள் ஒட்ட வேண்டும். தேர்தல் அதிகாரிகள் தேர்தலை வரும் ஜூன் 15க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.