என்னுடைய வெற்றிகரமான பந்துவீச்சிற்கு இந்த 3 ரகசியங்கள்தான் காரணம் – பும்ரா

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளஸ்சிஸ் 61, ரஜத் படிதார் 50, தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் அடித்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

அதைத்தொடர்ந்து 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பைக்கு ரோகித் சர்மா 38, இஷான் கிஷன் 69, சூர்யகுமார் யாதவ் 52, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 26, திலக் வர்மா 16 ரன்கள் அடித்து 15.3 ஓவரிலேயே எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

மும்பை அணியின் இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் எப்போதும் வித்தியாசமாக பந்து வீச பயிற்சி எடுப்பது, பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை அலசுவது, ஈகோவை பார்க்காமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பந்து வீசுவது ஆகியவைதான் தம்முடைய வெற்றிகரமான பவுலிங்கிற்கு காரணம் என்று பும்ரா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

“வெற்றிக்காக மகிழ்ச்சி. ஆனால் எப்போதும் நான் 5 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. இன்று என்னுடைய பந்தில் கேட்ச்சுகள் பீல்டர்களின் கைக்கு சென்று எனக்கு சாதகமாக அமைந்தது. 20 ஓவர் போட்டிகள் எப்போதும் பவுலர்களுக்கு கடினமானது என்பதால் உங்களுக்கு வித்தியாசமான திறமை வேண்டும். ஒரே மாதிரி பந்து வீசுவதை எப்போதும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அனைவரும் இங்கே டேட்டாவை வைத்து அலசுகின்றனர்.

பவுலிங் என்பது கடினமாகும். அதில் அடி வாங்கும் நீங்கள் மோசமான நாட்களை சந்திக்கிறீர்கள். அந்த மோசமான நாட்களில் என்னுடைய வீடியோக்களை பார்த்து எது வேலை செய்யவில்லை? ஏன் செய்யவில்லை? என்று பார்த்து அதற்கு தகுந்தாற்போல் அழுத்தத்தில் ரியாக்ட் செய்ய முயற்சிப்பேன். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்கள் சிக்சர் அடிக்கும்போது அழுத்தத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதையே களத்தில் சந்திக்கும்போது உங்களுக்கு பதில் கிடைக்கும்.

பேட்ஸ்மேன்கள் எதில் வலுவாக உள்ளனர் என்பதை நானும் அலசுகிறேன். ஒரே நாளில் உங்களுடைய அனைத்து ட்ரிக்கையும் பயன்படுத்த அவசியமில்லை. டி20 கிரிக்கெட்டில் ஈகோவுக்கு வேலையில்லை. அதனால் உங்களால் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீச முடியும் என்றாலும் விக்கெட்டை எடுக்க ஸ்லோயர் பந்தை வீச வேண்டுமானால் அதைத்தான் செய்ய வேண்டும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.