Vietnam: 12.5 பில்லியன் டாலர் மோசடி வழக்கு; பெண் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை! – கோர்ட் அதிரடி

வியட்நாமைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், வான் தின் ஃபாட். ட்ருங் மை லான் (67) என்பவர் இந்த நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்தார். இவர்மீது அரசு ஆவணங்களின்படி, 2012 முதல் 2022 வரை சைகோன் வர்த்தக வங்கியை தனிப்பட்ட ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக அதைக் கட்டுப்படுத்தியதாகவும், அதன் மூலம் சுமார் 12.5 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடி செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது 2022-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் எனக்கூறப்படுகிறது.

ட்ருங் மை லான்

இது தவிர, தனக்கும் தனது கூட்டாளிகளுக்கும் கடன் வழங்க உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல “பொய் நிறுவனங்களை” பயன்படுத்தி கடன் பெற்றிருக்கிறார். இவர் பெற்ற கடன்களால் 27 பில்லியன் டாலர் அளவுக்கு நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக, வியாட்நாம் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த மோசடியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் இவருக்கு உதவியிருக்கிறார்கள். ஆவணங்களின்படி, 5.2 மில்லியன் டாலர் அளவுக்கு முன்னாள் மத்திய அதிகாரி உட்பட அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார். பல்வேறு அரசியல் தலைவர்களும் இதில் சிக்கியிருக்கின்றனர்.

இந்தக் கொள்ளை விவகாரம் 2022-ம் ஆண்டில் வியட்நாமை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பான வழக்கில் ட்ருங் மை லான் கைதுசெய்யப்பட்டார். இந்தக் கொள்ளைக்கு உதவிய அனைத்து அரசு அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த மோசடி விவகாரத்தால், ரியல் எஸ்டேட் துறையும், வீடுகள் விற்பனை, வாடகை என அது தொடர்பான அனைத்தும் விவகாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ட்ருங் மை லான்

இதனால் அரசுக்கும் கடுமையாக நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, கடந்த மார்ச் 5-ம் தேதி மோசடி, சட்ட விதிமீறல் ஆகிய விவகாரங்களில் ட்ருங் மை லான் குற்றம் புரிந்திருப்பதை நீதிமன்றம் உறுதிசெய்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இவரது மருமகளும் வான் தின் ஃபாட்டின் தலைமை நிர்வாகியுமான ட்ரூங் ஹியூ வானுக்கும் இந்த மோசடி வழக்கில், 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

யார் இந்த ட்ருங் மை லான்?!

1956-ல் பிறந்த ட்ருங் மை லான், ஆரம்பத்தில், ஹோ சி மின் நகரின் பழைமையான சந்தையில் அழகுசாதனப் பொருள்களை விற்று, தன் தாயாருக்கு உதவத் தொடங்கினார்.

1992-ல், அவரும் அவரது குடும்பத்தினரும் வான் தின் ஃபாட் என்ற நிறுவனத்தை நிறுவி, வியட்நாமின் முதன்மையான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக அதை உருவாக்கினர். அதே ஆண்டு, ஹாங்காங் முதலீட்டாளர் எரிக் சு நாப்-கீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.