ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று அவர் கொடுக்கும் ஆலோசனைகள் சி.எஸ்.கே.வுக்கு பெரிதும் உதவுகிறது – பாண்ட்யா

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியன் சென்னை வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை குவித்தது.

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில்: “இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால் சென்னையின் வீரர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசினார்கள். குறிப்பாக பதிரானா மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார். அவர்களுடைய திட்டமும் செயல்பாடும் சிறப்பாக இருந்தது. அதோடு ஸ்டம்பிற்கு பின்னால் நின்று தோனி கொடுக்கும் ஆலோசனைகள் அனைத்தும் அவர்களுக்கு சிறப்பாக உதவுகிறது.

இந்த மைதானத்தில் பந்து சற்று நின்று வந்ததால் பேட்டிங்கில் சிறிய சிரமம் ஏற்பட்டது. இதுபோன்ற சேசிங்கில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும். அதோடு ரன் குவிப்பில் தொடர்ந்து இன்டென்ட் இருந்து கொண்டே இருக்க வேண்டும். பதிரனா வந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியபோது போட்டியில் சற்று மாற்றம் ஏற்பட்டது” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.