சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் – பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பவுலராக இருக்கும் முஸ்தபிசுர் இம்மாத கடைசி வரை மட்டுமே ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என கூறப்பட்டது. ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் 20 ஓவர் உலக கோப்பை தொடங்க இருப்பதால் அதற்கான பயிற்சியை தொடங்கும் வகையில் அவர் வங்கதேசம் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே முஸ்தபிசுர் ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்திருந்தது. ஆனால் அவரின் விடுமுறை இன்னும் ஒருநாள் நீட்டிக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தரப்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் வைக்கப்படிருந்தது.

அதற்கு காரணம், சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலராக மட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராகவும் முஸ்தபிசுர் இருக்கிறார். அவரின் இருப்பு சென்னை அணிக்கு மிகப்பெரிய பலம். டெத் ஓவர்களில் பத்திரனாவுடன் இணைந்து சூப்பராக பந்துவீசிக் கொண்டிருக்கிறார் முஸ்தபிசுர். இதனைக் கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மே 1 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடும் போட்டி வரையாவது முஸ்தபிசுர் விளையாட வேண்டும் என சிஎஸ்கே விரும்பியது. அதற்கு ஏற்ப எடுத்த நடவடிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாசிடிவ் ரிசல்ட் கிடைத்திருக்கிறது. மே 1 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் முஸ்தபிசூர் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்திருக்கிறது.

இது குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரிய துணை தலைவர் ஷஹ்ரியார் நஃபீஸ், ” முஸ்தபிசுர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி கொடுத்திருந்தோம். ஆனால் அவருடைய விடுமுறையை நீட்டிக்குமாறு சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது மே 1 ஆம் தேதி நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் அவர் விளையாட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களின் கோரிக்கை வங்கதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டு முஸ்தபிசுர் விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முஸ்தபிசுர் விளையாடுவதற்கான தடை நீக்கியுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த முடிவால் மகிழ்ச்சியடைந்துள்ளது. ஐபிஎல் 2024 தொடரைப் பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சிஎஸ்கே. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடக்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.