பாஜகவின் ‘விங்’ ஆக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் விரிவாக்கப்பட்ட அங்கம் (Wing) ஆக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் தேர்தெடுக்கப்பட்ட பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, என்.சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதிவுகளை சமூக வலைதளத்தில் இருந்து நீக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் தளம் தெரிவித்திருந்தது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமைச் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவின் பதிவுகள் மற்றும் பதாகைகள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்தில் இரண்டு புகார்கள் பதிவு செய்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாஜகவின் வெளிப்புற அங்கமாக தேர்தல் ஆணையம் செயல்படுவது நாட்டின் துரதிருஷ்டம்” என்று தெரிவித்தார்.

“தேர்தல் ஆணையம், ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்த உத்தரவை அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக 10-ம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் அந்த நான்கு பதிவுகளையும் சமூக வலைதளம் நீக்கத் தவறினால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது” என எக்ஸ் தளம் தெரிவித்திருந்தது.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சிகள், வேட்பாளர்களின் பேச்சுக்கள், பதிவுகளை எக்ஸ் தளம் நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்ததாக எக்ஸ் தளம் தெரிவித்திருந்தது.

இந்தியாவில் 2024 மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியிட்டது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் இருந்து வருகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.