டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க 100 சதவீதம் தயார் – தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்ததும் வரும் ஜூன் 1ம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 28ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி பயணிக்கும் விமானத்தில் இடம்பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

உலகக் கோப்பைக்கான அந்த விமானத்தில் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் உறுதியாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் இந்த கட்டத்தில், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய உணர்வாக இருக்கும்.

நான் அவ்வாறு செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளேன். இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தவிர என் வாழ்க்கையில் பெரிதாக எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.