அமெரிக்கா: பாலஸ்தீனர்களுக்கு விடுதலை கோரி பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய வம்சாவளி பெண் ஆர்ப்பாட்டம்

நியூயார்க்,

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

இதன்படி, 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வன்முறைக்கு உயிரிழந்தனர். 200-க்கும் மேலானவர்கள் பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. சிலர் பணய கைதியாக இருக்கும்போதே உயிரிழந்து உள்ளனர்.

ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள மீதமுள்ளவர்களையும் மீட்போம் என இஸ்ரேல் சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 34,049 ஆக உயர்ந்து உள்ளது என்று ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 76,901 பேர் மொத்தத்தில் காயமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான விசயங்கள் சமீபத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிலர் விடுதலை வேண்டும் என்று கோஷங்களை எழுப்பும் வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.

இதில், பெண் ஒருவர் இந்தியில், எங்களுக்கு என்ன வேண்டும்… சுதந்திரம்… பாலஸ்தீனத்தின் சுதந்திரம்… அதனை நாங்கள் பறித்து கொள்வோம். அது எங்களுடைய உரிமை… என கோஷம் எழுப்புகிறார். அவருடன் சேர்ந்து போராட்டக்காரர்களும் கோஷம் எழுப்பினர்.

அந்த பெண் நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறார். இதனால், அவர் இந்தியா வம்சாவளி பெண்ணாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அவர் பைடன் கவனியுங்கள், விடுதலை வேண்டும்… நெதன்யாகு கவனியுங்கள், விடுதலை வேண்டும்… மோடி கவனியுங்கள், விடுதலை வேண்டும்… என்ற கோஷங்களையும் எழுப்பினார்.

கடந்த வியாழன் அன்று இதேபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அந்த பல்கலைக்கழகத்தின் தலைவர் நெமத் மினோச் ஷபீக் ஒப்புதல் அளித்ததன்பேரில், நியூயார்க் நகர போலீசார் வந்து 108 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். அவர்களில் பலர் சஸ்பெண்டும் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஜனநாயக கட்சியின் தலைவர் இல்ஹான் உமர் என்பவரின் மகள் இஸ்ரா ஹிர்சி என்பவரும் ஒருவர் ஆவார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.