நடுவருடன் களத்தில் சீறிய விராட் கோலி..நடந்தது என்ன..?

கொல்கத்தா,

நடப்பு ஐ.பி.எல். சீசனில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஈடன் கார்டனில் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் அடித்தது.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – பாப் டு பிளெஸ்சிஸ் களமிறங்கினர்.

இதில் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கிய விராட் கோலி 2 சிக்சர்களும் அடித்து அசத்தினார். அவர் 7 பந்துகளில் 18 ரன்கள் அடித்த நிலையில் ஹர்சித் ராணா புல்டாசாக வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அந்த பந்து இடுப்புக்கு மேலே செல்வதுபோல் தெரிந்தது. இதனால் அவர் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ரீவியூவில் அவர் கீரிசுக்கு வெளியே நிற்பது தெரிந்தது. மேலும் ரீவியூவில் பந்தை அவர் அடிக்காமல் விட்டால் ஸ்டம்ப் லைனில் சரியாக செல்வதுபோல் தெரிந்தது. இதனால் கள நடுவர் தீர்ப்பின் படி விராட் கோலிக்கு அவுட் வழங்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த விராட் கோலி கள நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்துடனேயே பெவிலியன் நோக்கி சென்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.