இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா

டெல் அவிவ்,

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது ஒரே நாளில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக அவர்கள் கடத்திச் சென்றனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இதற்கிடையே காசாவை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாகுவும் சபதம் விடுத்துள்ளார்.

அதன்படி இந்த போர் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களில் பலர் அண்டை நாடுகளான எகிப்து, லெபனான் எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி வருகின்றனர்.ஆனால் அகதிகள் முகாமை குறிவைத்தும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றது. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த மோதலில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலை தடுக்க தவறியதாக அஹ்ரோன் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது பதவியில் இருந்து அவர் விலகியிருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.