மட்டக்களப்பில் “அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம்” 2024

மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம் 2024 தொடர்பான தரவரிசைப்படுத்தல் குறித்த கலந்துரையாடல் இன்று (22) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இம்முன்னாயத்த தரவரிசைப் படுத்தல் குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு அணிகள், விபரக்குறிப்பு, நிபந்தனைகள் தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன் போது அணிகளுக்கான தரவரிசை இலக்கங்கள் குழுக்கள் மூலம் வழங்கப்பட்டன.

அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம் 2024 இற்காக மட்டகளப்பு மாவட்டத்தில் செயற்படும் சகல அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், வைத்தியசாலைகள், கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட சகல நிறுவனங்களிலும் இருந்தும் ஆண்கள் சார்பாக 60 மற்றும் பெண்கள் சார்பில் 16 குழுக்கள் என மொத்தம் 76 அணிகள் பங்குபற்றவுள்ளன.

மாவட்டத்தின் நலன்களுக்கான செயற்படும் சகல அரச நிறுவனங்களுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறவுள்ள இவ்வரசாங்க அதிபர் மென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டி, இம்மாதம் (ஏப்ரல்) 29 ஆம் திகதி முதல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) நவரூப ரஞ்சனி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், மாவட்ட செயலக அதிகாரிகள், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.