IPL playoffs: இன்னும் ஆர்சிபி அணிக்கு பிளேஆப் செல்ல வாய்ப்புகள் உள்ளதா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2024 புள்ளிபட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி அடைந்து, 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  கேகேஆர் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தற்போது இழந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இருப்பினும், இன்னும் அதிகார்வப்பூர்வமாக பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறவில்லை. ஐபிஎல் 2024ல் பிளே ஆப்பிற்கு தகுதி பெற ஆர்சிபிக்கு என்ன என்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை பார்ப்போம்.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 223 ரன்கள் என்ற இலக்கை எதிர்த்து களமிறங்கியது.  விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் ஆகியோரின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்தாலும், வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் படிதார் மூன்றாவது விக்கெட்டுக்கு நல்ல ஒரு பாட்னர்ஷிப் கொடுத்தனர். வில் ஜாக்ஸ் 32 பந்துகளில் 55 ரன்களும், ரஜத் படிதார் 23 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் பந்து வீசிய ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரே ஓவரில் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்றினார்.  137-2 என்ற வலுவான நிலையில் இருந்த ஆர்சிபி அதன் பிறகு, 155-6 என மோசமான நிலைக்கு சென்றது.  

கடைசி ஓவரில் வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கர்ண் ஷர்மா யாரும் எதிர்பார்க்காத விதமாக மிட்செல் ஸ்டார்க் பந்தில் மூன்று சிக்ஸர்களை அடித்தார். இருப்பினும், துரதிஷ்டவசமாக ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேஆஃப் சுற்றுக்கான நம்பிக்கையை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பிளே ஆஃப்களுக்கு தகுதிபெற ஒரு அணிக்கு 8 வெற்றிகள் மற்றும் 16 புள்ளிகள் தேவை. ஆர்சிபி அவர்களின் மீதமுள்ள ஆறு போட்டிகளில் வென்றாலும், அவர்களால் பிளேஆஃப்களுக்குத் தகுதிபெற முடியாது. இருப்பினும், ஏதாவது அதிசயம் நடந்து மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சிறிது வாய்ப்பு உள்ளது.

விராட் கோலியின் சர்ச்சைக்குரிய அவுட்

இந்த போட்டியில் விராட் கோலி ஒரு சர்ச்சைக்குரிய முறையில் அவுட் ஆகி வெளியேறினார். ஹர்ஷித் ராணாவின் ஃபுல் டாஸில் விராட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த பந்து விராட்டின் இடுப்புக்கு மேல் இருந்தது.  இருப்பினும், கோலி தனது கிரீஸுக்கு வெளியே நின்றதால் நடுவர்கள் அவுட் கொடுத்தனர். 

கேகேஆர் அணி

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்களில் 222-6 ரன்களை எடுத்தது. பில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள் அடித்து இருந்தாலும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் நான்கு விக்கெட்டுகளை ஆர்சிபி விரைவாக வீழ்த்தியது. இதனால் கேகேஆர் 97-4 என போராடியது. இருப்பினும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். அதன் பின்பு களமிறங்கிய ரின்கு சிங் 24 ரன்களும், ஆண்ட்ரே ரசல் 27 ரன்களும் அடிக்க ரன்கள் அதிகமானது. கடைசி கட்டத்தில் ரமண்தீப் சிங் 9 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க 222 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி. இதுவே ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.