அமெரிக்காவில் காரை கவிழ்த்து மனைவி, குழந்தைகளை கொல்ல முயன்றது ஏன்? – இந்திய மருத்துவர் விநோத வாக்குமூலம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், பாசடீனா நகரை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் தர்மேஷ் படேல் (42). அவரது மனைவி நேஹா. அவர்களுக்கு 7 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தர்மேஷ் படேல், தனது மனைவி, இரு குழந்தைகளையும் காரில் சுற்றுலா அழைத்துச் சென்றார். அவரே காரை ஓட்டினார். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மலைப் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென 250 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் தர்மேஷ் படேல், நேஹா மற்றும் இரு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். போலீஸார் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் தர்மேஷ் படேலிடம்போலீஸார் விசாரணை நடத்தினர்.அப்போது, டயரில் ஏற்பட்ட பிரச் சினை காரணமாக 250 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். அவரது மனைவி நேஹாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, தர்மேஷ் படேல் வேண்டுமென்றே பள்ளத்தில் காரை கவிழ்த்தார் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து 2 மனநல மருத்துவர்கள் உதவியுடன் படேலிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த விநோத வாக்குமூலத்தில் கூறியதாவது:

எனது மனைவி மற்றும் குழந்தைகளை சமூகவிரோத கும்பல் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தக்கூடும் என்று அஞ்சினேன். அமெரிக்காவில் அடிக்கடி ரசாயன ஆலைகள் வெடித்துச் சிதறியதும் எனதுமனதை கடுமையாகப் பாதித்தது. இதுபோன்ற ரசாயன ஆலை விபத்தில் எனது குடும்பம் பாதிக்கப்படும் என்று அஞ்சினேன். ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா மீது திடீர் தாக்குதல் நடத்தும் என்ற பயமும் எழுந்தது.

இந்த ஆபத்துகளில் இருந்து எனது குடும்பத்தை காப்பாற்றவே மலை உச்சியில் இருந்து 250 அடி பள்ளத்தில் காரை கவிழ்த்து குடும்பத்தோடு தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது சிறையில் உள்ள படேல் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடும்போது, “தர்மேஷ் படேல் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே அவருக்கு மனநலசிகிச்சை அளிக்க வேண்டும். வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்’’ என்றனர்.

போலீஸார் கூறும்போது, ‘‘கலிபோர்னியா மாகாணத்தின் சான்மேடியோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. அடுத்த விசாரணை வரும் மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது தர்மேஷ் படேல் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா, அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறதா, குடும்பம் மற்றும் பொதுமக்களுக்கு அவரால் அச்சுறுத்தல் இருக்கிறதா என்பவை குறித்து விசாரணை நடத்தப்படும். உறவினர்கள் உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் தர்மேஷ் படேல் வழக்கில் நீதிபதி சூசன் முக்கிய உத்தரவைப் பிறப்பிப்பார்’’ என்று தெரிவித்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.